தொண்டமானாறு செல்வச்சந்நிதியானின் சித்திரத் தேர் எரிக்கப்பட்டு 38 ஆண்டுகள் நிறைவு
வரலாற்றுச் சிறப்புமிக்க வடமராட்சி தொண்டமானாறு செல்வச்சந்நிதியானின் சித்திரத் தேர் எரிக்கப்பட்டு இன்று(20) 38 ஆண்டுகள் கடந்துவிட்டது. ஈழத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க முருகன் ஆலயங்களுள் செல்வச்சந்நிதி முருகன் ஆலயமும் ஒன்றாகும்.
இலங்கையின் மிக உயரமானதும் உலகில் நான்காவது உயரமானதுமாக வர்ணிக்கப்பட்ட பிரசித்திபெற்ற தொண்டைமானாறு செல்வச்சந்நிதியானின் சித்திரத் தேர் 20.04.1986 அன்று சிங்கள இராணுவத்தால் தீயிட்டு அழிக்கப்பட்டு இன்றுடன் 38 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.
சிங்கள் இனவெறி ஆதிக்கம் பிடித்தவர்களால் சந்நிதியான் தேர் தீயிட்டு எரிக்கப்பட்ட பின்னர் தேரின் சில்லுகளின் இரும்பு வளையங்களும் தேரின் இரும்பு அச்சும் மட்டுமே எஞ்சியது, அந்த சில்லின் வளையங்கள் சுமார் ஆறு அடி உயரம் ஆகும்.
அதாவது சராசரி ஒரு மனிதனுடைய உயரத்தை விடப் பெரிதாகும். இந்தத் தேர் 1984 ஆம் ஆண்டு முதல் முதல் இழுக்கப்பட்டது.
ஆனால் 1986 ஆம் ஆண்டு இழுக்க முதல் தேர் எரியூட்டி சாம்பலாக்கப்பட்டது. சந்நிதியான் தேரானது பல நிதி நெருக்கீட்டிற்கு மத்தியில் செய்து முடிக்கப்பட்டது.
எனினும் தேருக்கு வடம் வாங்க காசு இல்லாத நிலையில் பூசாரியின் கனவில் வந்து முருகன் சொன்னதாக பக்தர்களோடு அக்கடற்கரைக்கு சென்று பார்த்தபோது கடலில் வடம் ஒன்று மிதந்து வந்தது அதை எடுத்துவந்தே தேரில் போட்டு வொள்ளோட்டம் விட்டார்கள்.
இந்நிலையில் தேர் எரிக்கப்பட்டபோது, கடலில் கண்டெடுக்கப்பட்ட வடம் தேர்முட்டியில் இருந்தபோது அவ் வடமும் தேருடன் சேர்ந்து எரிந்துவிட்டது. இத் தேரில் 1008 மணிகள் பொருத்தி இருந்தார்கள்.
அதுமட்டுமல்லாது செல்வச்சந்நிதியானின் தேர் இழுபடும்போது கலீரென ஒலிக்கும் மணிஓசை அச்சுவேலி சந்திவரை கேட்கும் என பெரியவர்கள் சொல்வார்கள்.
அப்படிப்பட்ட தேரை நாசமாக்கியவர்கள் தான் சிங்கள ஆதிக்க வெறியர்கள். வடமராட்சி தொண்டமனாறு செல்வச்சந்நிதியானின் சித்திர தேர் 1986 ம் ஆண்டு சித்திரை 20 ம் திகதி ஐக்கிய தேசிய கட்சியின் ரணிலின் மாமனாரான ஜே. ஆர். ஜெயவர்த்தன ஆட்சிக்காலத்தில் சிறிலங்கா அரசபடைகள் செல்வச்சந்நிதி வளாகம் நோக்கி முன்னேறியபோது எரிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.