இலங்கைவட மாகாணம்

வடக்கில் வீடற்றவர்களுக்கு புதிய வீட்டுத்திட்டம்; வடமாகாண ஆளுநர் உறுதி

ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய வட மாகாணத்தில் வீடற்றவர்களுக்கான புதிய வீட்டுத்திட்டம் விரைவில் ஆரம்பிக்கப்பட்டு ஒருவருடத்திற்குள் பூர்த்தி செய்யப்படவுள்ளதாக வடமாகாண ஆளுநர் பி. எஸ். எம். சார்ள்ஸ் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் நேற்று(16) இடம்பெற்ற புத்தாண்டு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

இவ் வருடத்தில் வெற்றி அளிக்கக்கூடிய பயிர்ச்செய்கையை வடமாகாணத்தில் மேற்கொள்ள முடியும். இதற்கு போதுமான அளவு நீர் காணப்படுகின்றது. பெரிய குளங்கள் மற்றும் சிறு குளங்களின் நீர்மட்டம் போதுமானதாக காணப்படுகின்றமையால் இடைபோகம் மற்றும் சிறுபோகம் ஆகியவற்றில் போதுமான அளவு விளைச்சலை எதிர்பார்க்க முடியும்.

ஆகவே இதன் ஊடாக நாங்கள் எங்களுடைய வறுமையிலிருந்து மீள்வதற்கான ஒரு சந்தர்ப்பமும் காணப்படுகிறது.

இவ் வருடத்திற்கான வரவு செலவுத் திட்டத்திலும் குளங்களை புனரமைப்பதற்கான நிதி ஒதுக்கீடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதேபோல வட மாகாணத்தில் காணப்படக்கூடிய 17 பாரிய குளங்களைப் புனரமைப்பு செய்வதற்கான நிதியை மத்திய அரசாங்கத்திடமும் ஏனைய நிதி நிறுவனங்களிடமும் நாங்கள் கோரியுள்ளோம்.

வட மாகாணத்தில் வீடற்றவர்களுக்கான சிக்கலை நிவர்த்திக்கும் நோக்கில் ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய புதிய வீட்டுத்திட்டம் முன்னெடுக்கப்படவிருக்கின்றது.

அதற்கமைய 32,000 பயனாளிகள் தற்போது தெரிவு செய்யப்பட்டுள்ளனர். குறித்த வீட்டுத்திட்டம் வெகு விரைவில் ஆரம்பிக்கப்பட்டு காணி உறுதிப் பத்திரத்துடன் பயனாளர்களிடம் எதிர்வரும் ஒரு வருடத்திற்குள் கையளிக்கப்படவுள்ளன.

இதேவேளை, மக்களிடையே கலைக்கலாசாரங்களை வளர்ப்பதற்கு அவர்கள் வாழும் கிராமங்களிலேயே திறந்தவெளி மேடைகளை அமைத்து அங்கு வாழக்கூடிய இளைஞர் யுவதிகளுக்கு சந்தர்ப்பங்களை பெற்றுக் கொடுக்க வேண்டும். இவ் விடயம் தொடர்பில் கலாசார உத்தியோகஸ்தர்கள் புதிய அணுகுமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.

கிராமங்களில் திறந்தவெளி மேடைகளை அமைத்து நிகழ்ச்சிகளை அரங்கேற்றுவதன் ஊடாக தங்களுடைய தனித்துவமான கலை, கலாசாரங்களை பேணிப் பாதுகாக்க வேண்டும் என்பதே எமது அவா.

இதேவேளை, வட மாகாணத்தில் சுற்றுலாத் துறையை மேம்படுத்துவது தொடர்பான தயார்படுத்தல்கள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன .

இது தொடர்பான இறுதித் தீர்மானங்கள் வெகு விரைவில் எடுக்கப்படவுள்ளதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியமையும் குறிப்பிடத்தக்கது.

மேலும் காட்டு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: