யாழில் வலுக்கும் வெள்ளை ஈ தாக்கம் – மக்களுக்கு வெளியாகிய எச்சரிக்கை..!
வடக்கு மாகாணத்தில் குறிப்பாக யாழ்ப்பாண மாவட்டத்தில் வெள்ளை ஈக்களின் தாக்கம் அதிகரித்துள்ளது. எனவே இது தொடர்பில் பொதுமக்களும் பண்ணையாளர்களும் அவதானிப்புடன் செயற்பட வேண்டும் என்று தென்னை பயிர்ச்செய்கை யாழ். பிராந்திய முகாமையாளர் தேவராஜா வைகுந்தன் தெரிவித்துள்ளார்.
நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:- வடக்கு மாகாணத்தில் வெள்ளை ஈக்களின் தாக்கம் உணரப்பட்டுள்ளது. குறிப்பாக யாழ்ப்பாண மாவட்டத்தில் இதன் தாக்கம் அதிகம் உணரப்பட்டுள்ளது.
இந்த ஈக்களின் தாக்கம் தென்னையில் மட்டுமல்லாமல், மாதுளை, உளுந்து, பயறு, வாழை போன்றவற்றிலும் பரவும் சாத்தியம் காணப்படுகின்றது.
இந்த வருடம் ஜனவரி மாதம் மாதம் 15 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் முதன் முறையாக இது அடையாளப்படுத்தப்பட்டது. பின்னர் அது படிப்படியாக யாழ்ப்பாண மாவட்டத்தின் நல்லூர் பிரதேச செயலகப் பிரிவு, யாழ்ப்பாண பிரதேச செயலக பிரிவு ஆகிய பகுதிகளில் உள்ள தென்னைகளைத் தாக்க தொடங்கியுள்ளது.
இதனை அடையாளம் கண்டு அழிக்காவிட்டால் பின்னர் இது. தென்னைகளை மிகமிக அதிகளவில் தாக்கும். இது தென்னோலைகளில் தீவிரமாகப் பற்றிப்பிடிக்கும். பின்னர் படிப்படியாக ஒளித்தொகுப்பைக் குறைத்து உற்பத்தித் திறனில் வீழ்ச்சியை ஏற்படுத்தும்.
இதற்கான சிகிச்சை முறைகளாக நீர்ப்பாசனம் விசுறுதல், வேப்பெண்ணெய்க் கரைசல் மற்றும் சவர்க்காரத்தூள் கரைசலை கலந்து தென்னைகளுக்கு முற்று முழுதாக விசுறுதல்,
அக்டா என்ற இரசாயனப் பொருளை 15 நாள்களுக்கு ஒரு தடவை விசுறுதல், அங்கீகரிக்கப்பட்ட கிருமி நாசினிகள் விசிறல்,
கோதுமை மா மற்றும் அரிசி மா ஆகியவற்றை சேர்த்து ஒரு கிலோ மாவுக்கு 20 லீற்றர் தண்ணீரைக் கலந்து விசுறுதல் போன்றன காணப்படுகின்றன – என்றார்