யாழில் மேற்கொள்ளப்படும் திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடல்
யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் கடற்றொழில் அமைச்சரும் யாழ் மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவருமான டக்ளஸ் தேவானந்தாவின் தலைமையிலும் வட மாகாண ஆளுநர் கௌரவ பி. எஸ். எம். சார்ள்ஸ் அவர்களின் இணைத்தலைமையிலும் இன்று(28) யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
யாழ் மாவட்டத்தில் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ள திட்ட முன்மொழிவுகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டு தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டன.
கடந்த(16) இல் நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் முன்னேற்றங்கள் தொடர்பாக ஆராயப்பட்டதோடு, பாராளுமன்ற உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்ட ஆலோசனைகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டன.
மாவட்டத்தில் முதலீட்டு வாய்ப்புக்காக அடையாளம் காணப்பட்ட நிலங்கள், இந்திய மீனவர்களின் சட்டவிரோத மீன்பிடி செயற்பாடு மற்றும் திருத்தப்படவேண்டிய மீன்பிடித் துறைமுகம், காணி விடுவிப்பு, சூரியகல வீட்டுத்திட்டம், பேரூந்து சேவை மற்றும் போக்குவரத்துப் பிரச்சினைகள், புகையிரத கடவைகளை முன்னுரிமை அடிப்படையில் அமைத்தல், மாற்றுத்திறனாளிகளின் பிரச்சினைகள், சட்டவிரோத நடவடிக்கைகள் மற்றும் போதைவஸ்து பாவனையை கட்டுப்படுத்தல், தென்னையில் ஏற்படும் வெள்ளை ஈ தாக்கம், வீடற்றவர்களுக்கு வீட்டுத்திட்டம் வழங்கல், வலி வடக்கு உயர் பாதுகாப்பு வலைய மீதமுள்ள மக்களின் காணிகளை மீள வழங்குதல் போன்ற விடயங்கள் தொடர்பாகவும் ஆராயப்பட்டன.
இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறிதரன், செல்வராஜா கஜேந்திரன், வட மாகாண சபையின் அவைத்தலைவர் சி. வி. கே. சிவஞானம், வட மாகாண பிரதம செயலாளர் எல். இளங்கோவன், யாழ் மாவட்ட பதில் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன், யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) க. ஸ்ரீமோகனன், வட மாகாண அமைச்சின் செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், இராணுவ பொலிஸ் கடற்படை அதிகாரிகள், மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், பிரதேச செயலாளர்கள், அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், கமநல சேவை அமைப்புக்களின் பிரதிநிதிகள், கடற்றொழிலாளர் சங்க பிரதிநிதிகள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.