மன்னாரில் அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள் சுகயீன விடுமுறைப் போராட்டம்
உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் கீழ் அபிவிருத்தி உத்தியோகஸ்தர்களாகக் கடமையாற்றும் அரச உத்தியோகஸ்தர்கள் இன்று(24) மன்னார் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக அமைதி வழிப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.
சம்பள உயர்வு,க்ஷமேலதிக நேர கொடுப்பனவு, பதில் கடமை, காகிதாகி செலவுகள் உட்பட பல்வேறு கொடுப்பனவுகளைப் பெற்றுக்கொள்வதில் பல வருடங்களாக நீடித்து வரும் இழுபறி நிலையை உடனடியாக நிவர்த்தி செய்து தருமாறு கோரி அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள் குறித்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அபிவிருத்தி உத்தியோகஸ்தர்களுக்கான மாதாந்தக் கொடுப்பனவை அரச சுற்றறிக்கைக்கு அமைவாக7500 அதிகரித்து வழங்கு, பதில் கடமைக்கான கொடுப்பனவை வழங்கு இல்லா விட்டால் பதில் கடமையை நிறுத்து, வெளிக்கள கொடுப்பனவை 300 இல் இருந்து 3000 ரூபாவாக அதிகரி, காகிதாகி கொடுப்பனவைப் பெற்று தாருங்கள் மற்றும் அபிவிருத்தி உத்தியோகஸ்தர்களுக்கு சம்மந்தமற்ற வேலைகளைத் திணிக்காதே போன்ற பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
11 வருடங்களுக்கு மேலாக அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்ற நிலையில் இதுவரை பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.