மட்டு கல்லடியில் ஐஸ் போதை பொருளுடன் இருவர் அதிரடிப் படையினரால் கைது
மட்டக்களப்பு வலயத்திற்குட்பட்ட பிரதேச செயலகமொன்றில் கடமையாற்றிவரும் போதை பொருள் வியாபாரி ஒருவர் உட்பட இருவரை 4 கிராம் 760 மில்லிக்கிராம் ஜஸ் போதை பொருளுடன் நேற்று சனிக்கிழமை (03) கல்லடி பகுதியில் வைத்து விசேட அதிரடிப்படையினர் கைது செய்து ஒப்படைத்துள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர். விசேட அதிரடிப்படைக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து விசேட அதிரடிப்படைத் தளபதி சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் வருண ஜயசுந்தரவின் ஆலோசனைக்கமைய அம்பாறை மட்டக்களப்பு உதவிப் பொலிஸ் பணிப்பாளரின் வழிகாட்டலின் கீழ் களுவாஞ்சிக்குடி அதிரடிப்படை முகாம் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஏ.பி. டில்சான் தலைமையில் 9047 பண்டார, 38291 ஜானக, 92136 மதுஷhன, 93185 ஜெயவீர, 80867 விஜயசிங்க ஆகியேர் கொண்ட குழுவினர். சம்பவதினமான நேற்று சனிக்கிழமை காலை 10 மணியளவில் கல்லடி பகுதியிலுள்ள வீதி ஒன்றில் கண்காணிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது அங்கு மோட்டார் சைக்கிள் ஒன்றில் வியாபாரத்துக்காக ஐஸ் போதைப் பொருளை எடுத்துக் கொண்டு வந்து வியாபாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவரையும் அதனை வாங்கச் சென்ற இருவரையும் அங்கிருந்த விசேட அதிரடிப்படையினர் சுற்றிவளைத்து மடக்கி பிடித்ததுடன் அவர்களிடமிருந்து 4 கிராம் 760 மில்லிக்கிராம் ஜஸ் போதை பொருள், மோட்டார் சைக்கிள் ஒன்று, இரண்டு கையடக்க தோலைபேசிகளை மீட்டனர். இதில் கைது செய்யப்பட்ட போதைப் பொருள் வியாபாரி பிரதேச செயலகம் ஒன்றில் கடமையாற்றிவரும் கல்லடி பகுதியைச் சேர்ந்தவர் எனவும் இவர்கள் இருவரையும் சான்று பொருளான ஐஸ் போதை பொருளையும் விசேட அதிரடிப்படையினர் ஒப்படைத்துள்ளதாகவும் இவர்களை விசாரணையின் பின்னர் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.