மட்டக்களப்பிற்கு ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்ட உயர் அதிகாரி விஜயம்
மட்டக்களப்பிற்கு ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்ட இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி அவுஸ்சா குபோட்டா மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரனுக்குமிடையிலான கலந்துரையாடல் மாவட்ட செயலத்தில் நேற்று(23) இடம் பெற்றது.
மாவட்டத்தில் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தினூடாக மேற்கொள்ளப்பட்டு வரும் செயற்திட்டங்களான ஐந்தாண்டு திட்டம் மற்றும் வீடமைப்பு திட்டங்கள் தொடர்பாக முக்கிய கவனம் செலுத்தப்பட்டது.
இதன் போது மாவட்டத்தில் அபிவிருத்தி செய்வதற்கு தேவையான விடயங்கள் தொடர்பாக ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்ட வதிவிட பிரதிநிதிக்கு பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ஆர். ஜதிஸ்குமாரினால் அளிக்கை செய்யப்பட்டது.
மேலும் காலநிலை மாற்றத்தினால் மாவட்டத்தில் ஏற்படும் வெள்ள பாதிப்பு, களப்பினை தூர்வார்தல், பாடசாலையில் மாணவர் இடைவிலகள், சிறு குளங்களை புணரமைத்தல்,விவசாயிகளுக்கான நெல் உலர்த்தும் இயந்திரத்தின் தேவை மற்றும் பல முக்கிய விடயங்கள் தொடர்பாகவும் கவனம் செலுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.
இந் நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்ஷினிஸ்ரீகாந், ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டத்தின் திட்ட நிபுணர் கே.பார்த்திபன், பிரதி திட்டமிடல் பணிப்பாளர்களான வீ.நவநீதன், ரி.நிர்மலராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.