இந்தியச்செய்திகள்இலங்கைஇன்றைய செய்திகள்முக்கிய செய்திகள்வட மாகாணம்

சிறப்பு முகாமில் அடைக்கப்பட்ட இலங்கை மீனவர்கள்; குடும்பத்தினர் கவலை

கடந்த வருடம் தலைமன்னார் பகுதியிலிருந்து கடற்றொழிலுக்காகச் சென்ற தலைமன்னார் கிராமப் பகுதியைச் சேர்ந்த இரு மீனவர்களும் இயந்திரக் கோளாறு காரணமாக இந்திய கடற்பகுதியில் சிக்கிய நிலையில் இந்திய மீனவர்களால் மீட்கப்பட்டு தமிழக கடலோர காவல்ப் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தனர்.

இந்திய கடலோர காவற்படை மேற்கொண்ட விசாரணையின் பின்னர் சிறையில் அடைக்கப்பட்டு மூன்று மாதங்களுக்கு முன்னர் இரு மீனவர்களும் இயந்திரக் கோளாறின் காரணமாகவே கரை ஒதுங்கியதன் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டிருந்தனர்.

இருப்பினும் விடுதலை செய்யப்பட்டு மூன்று மாதங்களுக்கு மேலாகியும் இரு மீனவர்களும் சொந்த நாட்டுக்கு அனுப்பி வைக்கப்படாத நிலையில் தற்போது சிறப்பு முகாம் ஒன்றில் அடைக்கப்பட்டுள்ளதாக இரு மீனவர்களின் குடும்பத்தினர் கவலை தெரிவித்துள்ளனர்.

இந்திய மீனவர்கள் எமது பகுதியில் சட்ட விரோத மீன்பிடியில் ஈடுபட்டு எமது வளங்களை அழிக்கும் போதும் கைதாகும் போதும் எமது மக்களும் அரசாங்கமும் நல்லெண்ண அடிப்படையில் அவர்களை விடுதலை செய்யும் போது இந்திய அரசாங்கம் மாத்திரம் சிறையில் பல மாதங்கள் வைத்திருப்பதும் சிறையில் இருந்து விடுதலையான பின்னரும் சிறப்பு முகாம்களில் வைத்திருப்பதும் தங்களுக்கு மன வேதனை அளிப்பதாகவும் இரு மீனவர்களின் குடும்பத்தினரும் தெரிவித்துள்ளனர்.

இந் நிலையில் குறித்த இரு மீனவர்களையும் இலங்கைக்கு அழைத்து வந்து தம்மிடம் ஒப்படைக்குமாறு பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கடற்றொழில் அமைச்சர் உட்பட அனைத்து தரப்பினருக்கும் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.

இந்த நிலையில் குறித்த விடயம் தொடர்பில் கடற்றொழில் அமைச்சர் டக்லஸ் தேவானந்தாவிடம் வினவிய போது குறித்த விடயம் தொடர்பில் தன்னிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ள நிலையில் தான் இந்திய பிரதிநிதிகளிடம் பேசியுள்ளதாகவும் அதே நேரம் இந்திய சிறைச்சாலைகளில் உள்ள மீனவர்கள் விடுதலை தொடர்பிலும் அங்கு கையகப்படுத்தப்பட்டுள்ள மீனவர்களின் படகுகளை விடுவிப்பது தொடர்பிலும் தான் தொடர்ந்து பேசி கொண்டிருப்பதாகவும் விரைவில் இரு மீனவர்களையும் நாட்டுக்கு கொண்டுவருவதற்கான நடவடிக்கை இடம் பெறும் என தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

மேலும் காட்டு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: