காந்திப் பூங்காவில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி
இலங்கையில் உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் இடம்பெற்று இன்றுடன் 5 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு மட்டக்களப்பு காந்தி பூங்காவில் இன்று(21) நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது.
அத்துடன் உயிர்த்த ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் தொடர்புபட்ட சூத்திரதாரிகளை கைது செய்ய கோரி பொதுமக்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்களால் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமும் முன்னெடுக்கப்பட்டது.
உயிர்த்த ஞாயிறு குண்டுத தாக்குதல் இடம்பெற்று 5 வருட நினைவு தினத்தையிட்டு கூத்திரதாரிகளைக் கைது செய்யக் கோரி சமூக செயற்பாட்டாளர்களால் கவனயீர்ப்பு ஆர்பாட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டதையடுத்து காந்திப் பூங்காவின் முன்னால் பொதுமக்கள் அரசில்வாதிகள், சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் மதகுருமார்கள் ஆகியோர் ஒன்று திரண்டனர்.
இதன் போது அரச கொலையாளிகளை மறைக்காதே, குண்டுவெடிப்பின் சூத்திரதாரிகளைக் கைது செய், சர்வதேசமே மெளனத்தை கலைத்து ஈஸ்டர் குண்டுவெடிப்பின் நீதியைத் தா, வேண்டும் வேண்டும் நீதி வேண்டும், ஜ.நாவில் வழங்கிய வாக்கு மூலம் என்னாச்சு, 5 ஆண்டு கடந்தும் அவலத்துக்கு நீதி இல்லையா? போன்ற சுலோகங்கள் ஏந்தியவாறும் கோஷங்கள் எழுப்பியவாறும் சுமார் ஒருமணித்தியாலம் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பின்னர் ஆர்பாட்டகாரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.