களுவாஞ்சிகுடியில் 347 மில்லியன் செலவில் உள்ளக வீதிகள் திறந்து வைப்பு
மட்டக்களப்பு – களுவாஞ்சிகுடி எருவில் பகுதியில் புனரமைக்கப்பட்ட 8.4 km உள்ளக வீதிகள் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனினால் இன்று(19) மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவரும்
வர்த்தக இராஜாங்க அமைச்சருமான சதாசிவம் வியாழேந்திரன் பிரதம அதிதியாக கலந்து கொண்ட நிகழ்விற்கு விசேட அதிதிகளாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் கிழக்கு மாகாண பிரதம நிறைவேற்று பொறியியலாளர் வரதன், கிழக்கு மாகாண பாலர் பாடசாலை பணியகத்தின் தவிசாளர் வை. சந்திரமோகன், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் மட்டக்களப்பு மாவட்ட பிரதம நிறைவேற்று பொறியியலாளர்
லிங்கேஸ்வரன் உள்ளிட்ட கிராமிய சங்கங்களின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
347 மில்லியன் செலவில் காபட் மற்றும் கொங்கிறிட் வீதிகளாக புரைமைக்கப்பட்டுள்ள வீதிகளே இராஜாங்க அமைச்சரினால் இன்று மக்கள் பாவனைக்காக உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வுகளில் ஆலய குருமார், வீதி அபிவிருத்தி அதிகார சபை உத்தியோகத்தர்கள் மற்றும் கிராம மக்கள் ஆகியோரும் கலந்து கொண்டு நிகழ்வுகளை சிறப்பித்திருந்தனர்.
இதன் போது தமது கிராமத்தில் நீண்ட காலமாக பாரிய பிரச்சனையாக இருந்து வந்த வீதிகளை செப்பனிட்டு கொடுத்தமைக்காக அப்பகுதி மக்கள் இராஜாங்க அமைச்சருக்கு தமது நன்றிகளை தெரிவித்தமையும் குறிப்பிடத்தக்கது.