கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக் கோரி கொட்டும் மழையில் 3 வது நாளாக மக்கள் போராட்டம்
கல்முனை வடக்கு பிரதேச செயலக நிர்வாக செயற்பாடுகளுக்கும் எதிரான அடக்குமுறைகளுக்கும் அத்து மீறல்களுக்கும் எதிர்ப்புத் தெரிவித்து கொட்டும் மழையிலும் 3 வது நாளாக இன்றும்(27) தொடர் போரட்டத்தில் மக்கள் ஈடுபட்டனர்.
குறித்த பிரதேச உப செயலகப் பிரிவை தரமுயர்த்த கோரியும் மாவட்ட அபிவிருத்திக் குழுவில் நிதி ஒதுக்கப்படாமல் புறக்கணிக்கப்பட்டு வருவதைக் கண்டித்து பிரதேச மக்கள் கடந்த 25 ம் திகதி பிரதேச செயலகத்தின் முன்னால் கவனயீர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்தனர்.
இதனையடுத்து அங்கு தொடர் போராட்டம் இடம்பெற்றுவரும் நிலையில் இன்று 3 வது நாளாக ஒன்று திரண்ட மக்கள் அரசகாணி பங்கீட்டில் புறக்கணிக்கப்பட்டு வருகின்றோம், நீதி குப்பையில் அநீதி கோபுரத்திலா? அரச அதிகாரிகளே அமைச்சரவை தீர்மானத்துக்கு எதிராக திருட்டு வேலைகளை உடன் நிறுத்து, பிரதேச செயலகத்தை சட்டவிரோதமான முறையில் உப அலுவலகமாக மாற்றுவதை நிறுத்து, அரச அதிகாரிகளே அரசியல்வாதிகளுக்கு அடிபணியாதே, பொய்வாக்குறுதிகளை இனிமேலும் நம்புவதற்கு நாங்கள் முட்டாள்கள் அல்ல, அபிவிருத்தி வேலைகளில் புறக்கணிக்கப்பட்டு வருகின்றோம், நிருவாக உரிமையை மறுக்காதே, நியாயங்களை தூக்கில் இடாதே? போன்ற வாக்கியங்கள் கொண்ட சுலோகங்களை ஏந்தியவாறு கொட்டும் மழையில் ஒருகையில் குடையுடனும் ஒருகையில் எதிர்ப்பு சுலோகங்கள் ஏந்தியவாறு கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டையும் குறிப்பிடத்தக்கது.