கடற்றொழில் மீனவர்களுக்கான புதிய சட்டமூல வரைபு தொடர்பான கலந்துரையாடல்
கடற்தொழில் மீனவர்களுக்காக உருவாக்கப்பட்டுவரும் புதிய சட்டமூல வரைபு தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று(18) முல்லைத்தீவில் இடம்பெற்றது.
முல்லைத்தீவு கரைத்துறைப்பற்று பிரதேச சபை கலாசார மண்டபத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில், புதிய சட்டமூலம் தொடர்பாக கொழும்பு பணிப்பாளர் நாயகத்துடன் இணைந்து அமைச்சின் செயலாளர் தவராசா வளவாளராக கலந்து கொண்டு சட்டமூலம் தொடர்பான கருத்துக்கள், ஆலோசனைகளை வழங்கினார்.
குறித்த கலந்துரையாடலில் அமைச்சின் உத்தியோகத்தர்கள், சமாச உறுப்பினர்கள் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழில் சங்க உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
குறித்த கலந்துரையாடலில், மீன்பிடி நடவடிக்கை உரிமம் வழங்கலின் பொதுவான கோட்பாடுகள், மீன்பிடி உரிமத்தின் கால எல்லை, மீன்பிடி நடவடிக்கை உரிமங்களின் கைமாற்றம், வெளிநாட்டு கலன்கள் மூலம் இலங்கை நிலப்பரப்பில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுதலை தடை செய்தல் மற்றும் இலங்கை நிலப்பரப்புகளில் மீன்பிடி செயற்பாடுகளை நடாத்துவதற்கான மீன்பிடி உரிமமொன்றை புதுப்பித்தல் போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.