திருகோணமலையில் பல்லின கலை இலக்கிய விழா
திருகோணமலை மாவட்ட செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட மாவட்ட பல்லின கலை இலக்கிய விழா இன்று(18) திருகோணமலை மாவட்ட செயலக வளாகத்தில் அரசாங்க அதிபர் சாமிந்த ஹெட்டியாரச்சி தலைமையில் நடைபெற்றது.
திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபரினால் தேசியக்கொடி ஏற்றப்பட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டு நிகழ்வு ஆரம்பமானது.
சிங்கள, தமிழ், இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ சமயங்களின் கலை கலாசார நிகழ்வுகளும் இதன்போது மாவட்ட செயலக உத்தியோகத்தர்களின் பங்குபற்றுதலுடன் சிறப்பாக நடைபெற்றது.
கயிறு இழுத்தல், முட்டி உடைத்தல், தலையணை அடி, கரண்டியில் தேசிக்காய் வைத்து நடத்தல், யானைக்கு கண் வைத்தல், தொப்பிகளை மாற்றுதல், பலூன் நடனம் மற்றும் பப்பாளி விதைகளை எண்ணுதல் போன்ற பல போட்டிகள் நடாத்தப்பட்டதுடன் வெற்றியீட்டியவர்களுக்கு பரிசில்களும் இதன்போது வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர்கள், மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.