வீடுகளுக்குள் புகுந்த வெள்ள நீரால் மக்கள் அவதி
வவுனியா மகாறம்பைக்குளம் காந்தி வீதியில் இருப்பிடங்களுக்குள் வெள்ளநீர் தேங்கி நிற்பதால் பொதுமக்கள் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
குறித்த பகுதியில் உள்ள காந்திவீதி அண்மையில் புணரமைக்கப்பட்டு காப்பெற் வீதியாக மாற்றப்பட்டுள்ளது.
எனினும் இவ் வீதி புணரமைக்கப்பட்ட போது சரியான திட்டமிடலினை முன்னெடுக்காமையால் பொதுமக்களின் காணிகளுக்குள் வெள்ளநீர் உட்புகுந்துள்ளது.
இது தொடர்பில் பொதுமக்கள் கருத்து தெரிவிக்கையில், குறித்த வீதி அமைக்கும் போது எமது கருத்துக்கள் புறம்தள்ளப்பட்டு, முறையாக திட்டமிடப்படாமையால் எமது காணிகளிற்குள் வெள்ளநீர் தேங்கியுள்ளது.இதனால் பல்வேறு அசௌகரியங்களை நாம் எதிர்நோக்கியுள்ளோம்.
இது தொடர்பாக பல்வேறு தரப்புக்களிற்கும் தெரியப்படுத்திய நிலையில் எவரும் இந்த விடயத்தில் அக்கறை கொள்ளவில்லை.
வெள்ள நீர் வடிந்தோடுவதற்கான வடிகான்கள் இன்மையால் காணிகளிற்குள் நீர்தேங்கி நிற்கின்றது. இதனால் கிணற்றுநீர் மாசடைந்துள்ளது.
தொடர்ச்சியாக இந்த நிலைமை நீடிப்பதால் நாம் உறவினர் வீடுகளிலேயே தங்கி வாழும் நிலைமை ஏற்ப்பட்டுள்ளது.
எனவே உரிய அதிகாரிகள் நீர்வடிந்தோடுவதற்கான வழிமுறைகளை உருவாக்கித்திரவேண்டும் என்று கேட்டு நிற்கின்றோம் என அவர்கள் தெரிவித்தனர்.