விசேட சுற்றிவளைப்பில் பாதாள உலகக் குழுக்களைச் சேர்ந்த 11 பேர் கைது
பாதாள உலகச் செயற்பாடுகளை ஒடுக்குவதற்காக உருவாக்கப்பட்ட 20 குழுவினரால் நாடளாவிய ரீதியில் நேற்று(17) மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சுற்றிவளைப்பின்போது பாதாள உலக குழுக்களைச் சேர்ந்தவர்களுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணியதாகக் கூறப்படும் 16 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேல் மாகாணத்தின் வட பிராந்திய பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் மோதரை மற்றும் குளியாப்பிட்டிய ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 36 , 37 மற்றும் 48 வயதுடைய மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேல் மாகாணத்தின் தெற்கு பிராந்திய பொலிஸ் குற்றத்தடுப்புப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் ரணால, அங்கொடை மற்றும் வெல்லம்பிட்டி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 42, 25, 49 மற்றும் 38 வயதுடைய நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
களுத்துறை பொலிஸ் குற்றத்தடுப்புப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் அலுபோமுல்ல பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய சந்தேக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
காலி பொலிஸ் குற்றத்தடுப்புப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் மிட்டியாகொட மற்றும் ஹங்வெல்ல ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 33 மற்றும் 25 வயதுடைய இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த மாதம் 19 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இச் சுற்றிவளைப்பில் இதுவரை பாதாள உலகக் குற்றக் குழுக்களைச் சேர்ந்த 466 பேர் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.