தமிழ் – சிங்கள புத்தாண்டுக்குப் பின்னரான முதல் அமைச்சரவைக் கூட்டம் நாளை(24) நடைபெற உள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்திற்கு நீதியமைச்சு இரண்டு புதிய அமைச்சரவைப் பத்திரங்களை சமர்ப்பிக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
குற்றச் செயல்களின் மூலம் பெறப்பட்ட சொத்துக்களைப் பறிமுதல் செய்வதற்கான சட்டங்களைத் தயாரிப்பது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் மற்றும் பழங்குடியின மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான அமைச்சரவைப் பத்திரம் என்பன இவ்வாறு சமர்ப்பிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தலைவராக நியமிக்கப்பட்டதன் பின்னர் விஜயதாச ராஜபக்ச முதன்முறையாக அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்து கொள்கின்றார்.
இதேவேளை உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலான விவாதம் நாளை முதல் மூன்று நாட்களுக்கு நடத்துவதற்கு பாராளுமன்ற விவகாரங்களுக்கான குழு தீர்மானித்துள்ளது.
நாளை காலை 9:30 மணி முதல் 10:30 மணி வரை, அபின் மற்றும் அபாயகரமான போதைப் பொருள்கள் சட்டத்தின் கீழ் உள்ள உத்தரவுகள் மீது விவாதம் நடத்தப்பட்டு, அதன் பிறகு உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விவாதம் ஆரம்பமாகவுள்ளது.
இவ் விவாதத்திற்கான பிரேரணை எதிர்க்கட்சிகளால் கொண்டுவரப்பட்டதுடன், முன்னதாக உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக 13 கோடி ரூபா செலவில் 11 நாட்கள் பாராளுமன்ற விவாதம் நடத்தப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.