நுவரெலியா – மீபிலிபான “அபி யூத்” இளைஞர் அமைப்பினால் நுவரெலியா மாவட்ட செயலகம், பிரதேச செயலகம் இணைந்து நேற்று(14) ஏற்பாடு செய்திருந்த சித்திரைப் புத்தாண்டு நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பங்கேற்றார்.
பாரம்பரிய சம்பிரதாயங்களுக்கமைவாக, இடம்பெற்ற இந்நிகழ்வில், விளையாட்டு மற்றும் கலாசார அம்சங்கள் பலவும் உள்ளடக்கியிருந்தன.
புத்தாண்டு நிகழ்வு நடைபெற்ற இடத்திற்கு வருகைத் தந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சில போட்டிகளைக் கண்டுகளித்த பின்னர், அங்கு இடம்பெற்ற சைக்கிளோட்ட போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கும் பரிசுகளை வழங்கினார்.
சித்திரைப் புத்தாண்டு நிகழ்வைக் கண்டுகளிக்க வந்த பிரதேச மக்களுடன் சிநேகபூர்வமாக கலந்துரையாடியதோடு, அப்போது மக்கள் முன்வைத்த பிரச்சினைகளுக்கு தீர்வைத் தருவதாக உறுதியளித்தார்.
அதற்கிணையாக நாடளாவிய ரீதியிலுள்ள பல பிரதேச செயலகப் பிரிவுகளிலும் இம்முறை தமிழ் சிங்களப் புத்தாண்டு நிகழ்வு ஏற்பாடு செய்யப்படிருந்தது.
கடந்த வருடத்தை விடவும் இம்முறை அதிகளவில் சித்திரைப் புத்தாண்டு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
நுவரெலியா – மீபிலிபான சித்திரைப் புத்தாண்டு நிகழ்வில் சுற்றுலா, காணி, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோவும், பிரதேச அரசியல்வாதிகள் சிலரும் கலந்து கொண்டனர்.