நிகழ்நிலை காப்புச் சட்டத்தின் கீழ் ஆதரவாளர் ஒருவர் கைது
சமூக ஊடகங்களில் அவதூறான விடயங்களை பரப்பி வந்த நபர் ஒருவரைக் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் கைதுசெய்துள்ளதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார். பாணந்துறை பிரதேச சமூக காவல் குழு உறுப்பினர்களுக்கு கல்வி கற்பிக்கும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறியிருந்தார். தவிரவும் கைது செய்யப்பட்ட போது குறித்த நபரிடம் சுமார் நான்கு இலட்சம் ரூபாய் வரை இருந்ததாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார். மேலும், சந்தேக நபர் ஒரு அரசியல்வாதியின் ஆதரவுடன் தீங்கிழைக்கும் வகையிலான அவதூறு பிரச்சாரங்களை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார். இதன்காரணமாக குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார், அரசியல்வாதி ஒருவர் தனக்கு பணம் கொடுத்ததாகவும் அதன் பின்னரே அவர் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி இணையத்தில் அவதூறாகப் பேசியதாகவும், குறித்த சந்தேக நபர் கூறியுள்ளார். இந்நிலையில், இலங்கை ரூபாவிற்கு டொலர்களை மாற்றுவதற்காக கோட்டைக்குச் சென்றபோதே இந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். நிகழ்நிலைக் கப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்ததன் பின்னர் இடம்பெற்ற முதலாவது கைதாக இது பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.