ஆயித்தியமலையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட சத்துமா உற்பத்தி நிலையம் திறந்து வைப்பு
அரசாங்கத்தினால் கிழக்கு மாகாணத்தில் பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தினை கட்டியெழுப்பும் செயற்பாடுகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தில் மிகவும் பின்தங்கிய பிரதேசப் பெண்களின் நிலைபெறான அபிவிருத்திக்கு தொழில் வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுக்கும் முகமாக நியூசிலாந்து வெளிநாட்டு அமைச்சின் நிதி உதவியின் கீழ் ஆயத்தியமலையில் 80 லட்சம் ரூபாய் செலவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட சத்துமா உற்பத்தி நிலையம் மற்றும் அதனோடு இணைந்த வெதுப்பக தொகுதி திறப்பு விழா நிகழ்வு இன்று(27) மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் திருமதி நமசிவாயம் சத்யானந்தி தலைமையில் இடம்பெற்றது.
இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜே. ஜே முரளிதரன் கலந்து கொண்டு இந்த புதிய உற்பத்தி நிலையத்தினை திறந்து வைத்து அங்கு மேற்கொள்ளப்படும் செயற்பாடுகளையும் பார்வையிட்டார்.
இத் திறப்பு விழா நிகழ்வுக்கு சிறுவர் நிதியத்தின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி செல்வி ஆடித் ஹோஸ், பிரதேச செயலக உயர் அதிகாரிகள், ஆயித்தியமலை பொலிஸ் நிலைய உயர் அதிகாரிகள் மற்றும் பிரதேச பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பின் தங்கிய பிரதேச மக்களின் ஆரோக்கியத்தினைக் கட்டியெழுப்பும் முகமாக குறைந்த விலையில் காலடியிலே தங்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களைப் பெறும் பொருட்டே இந்த புதிய உற்பத்தி நிலையமும் வெதுப்பக தொகுதியும் இங்கு திறந்து வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.