நாட்டில் பொதுத்தேர்தலை முதலில் நடத்த வேண்டும்- ஊடகத்துறை இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார
நாட்டில் அரசியல் நிலமை நன்மை பயக்கும் வகையில் அமைய வேண்டுமாயின் பொதுத்தேர்தலை முதலில் நடத்த வேண்டும் என ஊடகத்துறை இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார தெரிவித்தார்.
பத்தரமுல்லையில் உள்ள ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் இன்று(26) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவை பலப்படுத்தும் பணிகள் கட்சியின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, தேசிய அமைப்பாளர் பஷில் ராஜபக்ஷ தலைமையில் முன்னெடுக்கப்படுகிறது.
கட்சியின் நிறைவேற்று சபை கூட்டம் நாளை(27) காலை கூடவுள்ளது.
இவ்நிறைவேற்று சபைக் கூட்டத்தில் மே தினம், புதிய அரசியல் கூட்டணி உள்ளிட்ட முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்படும்.
மே தின கூட்டத்தை இம்முறை கொழும்பு கெம்பல் மைதானத்தில் நடத்த உத்தேசித்துள்ளோம்.
காலி முகத்திடல் மைதானத்தில் கூட்டத்தை நடத்த ஆரம்பத்தில் உத்தேசித்திருந்தோம். இருப்பினும் அரசாங்கம் அதற்கு அனுமதி வழங்கவில்லை.
நாட்டில் சிறந்த அரசியல் நிலமை தோற்றம் பெற வேண்டுமாயின் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என கட்சியின் தேசிய அமைப்பாளர் பஷில் ராஜபக்ஷ ஜனாதிபதியிடம் வலிறுத்தியுள்ளார்.
பொதுத்தேர்தலை முதலில் நடத்த வேண்டும் என்பதற்காக ஜனாதிபதி தேர்தலுக்கு நாங்கள் தயாரில்லை என்று கருத முடியாது. இந்த ஆண்டு எந்த தேர்தல் இடம்பெற்றாலும் நாங்கள் வெற்றிப் பெறுவோம்.
தற்போதைய அரசியல் சூழலில் எந்த அரசியல் கட்சிகளுக்கும் வரையறையற்ற அதிகாரம் கிடைக்க கூடாது. பெரும்பான்மை அதிகாரம் ஒரு கட்சியை மையப்படுத்தியதாக காணப்படும் சூழலில் முரண்பாடுகள் மாத்திரமே தோற்றம் பெறும் என அவர் மேலும் தெரிவித்தார்.