சாந்தனை நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை: ஜனாதிபதி உறுதி
முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்ட சாந்தனை நாட்டிற்கு அழைத்து வருவதற்கு ஏற்பாடுகளை மேற்கொள்ள ஜனாதிபதி உறுதியளித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியுடன் இன்று(03) இடம்பெற்ற சந்திப்பின் பின்னரே சி. சிறீதரன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், விடுதலை செய்யப்பட்ட சாந்தன் அவர்கள் தற்போது உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார்.
அவரது வருகைக்காக அவருடைய தாயார் பலவருடங்களாக காத்துக்கொண்டிருப்பதோடு தனது இறுதிக் காலத்தில் மகன் தன்னுடன் இருக்க வேண்டும் என்று விரும்புகின்றார்.
நானும் நாடாளுமன்ற உறுப்பினர் மனோகணேசனும் ஜனாதிபதி அவர்களை சந்தித்து சாந்தனை நாட்டிற்கு அழைத்து வருவது குறித்து பேசினோம்.
இந்நிலையில், ஜனாதிபதி அவர்கள் நான் அதற்கான ஏற்பாடுகளைச் செய்து தருவதாக கூறியுள்ளதோடு சாந்தன் அவர்களின் தாயாரிடமிருந்து ஒரு கடிதமும், எங்களுடைய தரப்பிலிருந்து ஒரு வேண்டுகோள் கடிதமும் வழங்குமாறு கோரியுள்ளார்.
நாங்கள் நாளையதினம் அந்த கடிதங்களையும், சம்பந்தப்பட்ட ஆவணங்களையும் ஜனாதிபதி அவர்களிடம் வழங்குவோம்.
சாந்தனை விரைவில் நாட்டுக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை தொடர்ந்தும் செயல் வடிவில் செய்வோம் என அவர் மேலும் தெரிவித்தார்.