இலங்கையில் இன்று முதல் ஒருங்கிணைந்த கட்டணம் செலுத்தும் முறை அறிமுகம்
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆகியோர் இணைந்து இலங்கையில் ஒருங்கிணைந்த கட்டணம் செலுத்தும் முறை யுபிஐ (UPI) சேவைகளை இன்று(12) பிற்பகல் 1 மணிக்கு காணொளி காட்சி மூலம் ஆரம்பித்து வைக்கின்றனர்.
UPI எனப்படும் இந்திய ஒருங்கிணைந்த கட்டணச் செயல்முறை 2016 ஆம் ஆண்டில் இந்திய தேசிய கொடுப்பனவு கழகத்தால் உடனடி பணம் செலுத்தும் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த கட்டண முறையானது கையடக்க தொலைபேசிகள் மூலம் வங்கிகளுக்கிடையேயான மற்றும் தனிப்பட்ட வர்த்தக பரிவர்த்தனைகளை எளிதாக்குகிறது.
இதன் மூலம் இலங்கையின் சுற்றுலா வர்த்தகம் மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கை மற்றும் மொரீஷியஸுடன் இந்தியாவின் வலுவான கலாசார மற்றும் மக்களுக்கு இடையிலான தொடர்புகளைக் கருத்தில் கொண்டு, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என இந்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இதன் மூலம் வேகமான மற்றும் தடையற்ற டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை அனுபவம் கிடைக்கும். இது அந்நாடுகளில் உள்ள பலதரப்பட்ட மக்களுக்கு பயனளிக்கும் என்பதுடன் நாடுகளுக்கு இடையிலான டிஜிட்டல் இணைப்பை மேம்படுத்தும்.