இலங்கைகிழக்கு மாகாணம்

சாய்ந்தமருதில் மீனவர்கள் சாலை மறியல் போராட்டம் !

சாய்ந்தமருது பிரதேசத்தில் கடலரிப்பினால் தமது மீனவ வாடிகள் முழுமையாக கடலுக்குள் அடித்துச் செல்லப்படுவதாலும், மீனவ நடவடிக்கைகளுக்கு இடையூறாக பாறாங்கற்களை கொண்டு வீதிகளை மறித்து வைத்திருப்பதால் போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாகவும் தெரிவித்து சாய்ந்தமருது மீனவர்களும், மீனவ வாடி உரிமையாளர்களும் சாலை மறியல் போராட்டத்தில் இன்று காலை முதல் ஈடுபட்டனர்.

கரையோரம் பேணல் திணைக்களம் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் கடலரிப்பை கட்டுப்படுத்தும் நோக்கில் பாறாங்கற்களை சாய்ந்தமருது கடற்கரையை அண்டிய பிரதேசத்தில் தேக்கி வைத்திருப்பதாகவும் இதனால் மீனவர்கள் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட முடியாமல் இருப்பதாகவும் மீனவர்கள் தெரிவித்தனர்.

மேலும், மீன்பிடி வள்ளங்களை கரைக்கு இழுத்து வைக்க முடியதளவில் கடலரிப்பு ஏற்பட்டுள்ளமையால் உடனடியாக கடலரிப்பை கட்டுப்படுத்தும் நடவடிக்கையை கரையோரம் பேணல் திணைக்களம் துரிதப்படுத்துமாறும் மீனவர்கள் கேட்டுக்கொண்டனர்.

கரையோரம் பேணல் திணைக்களத்தின் அசமந்த போக்கினால் மீனவர்கள் தொடர்ந்தும் காயமுற்றுவருவதாகவும் மீனவ நடவடிக்கைகளுக்கு இடையூறாக பாறாங்கற்களை வைத்திராது உடனடியாக வேலைகளை துரிதப்படுத்துமாறும் போராட்ட களத்தில் கோஷங்கள் எழுந்தன.

வீதிகளை இடைமறித்து மீன்பிடி வளங்களை நிறுத்தி வைத்திருந்தமையால் இலங்கையின் முக்கிய மீன்வியாபார சந்தையை கொண்டிருக்கும் இந்த பிரதேசத்தில் பல்வேறு பிரதேசங்களையும் சேர்ந்த வாகனங்கள் மணித்தியாலமளவில் தரித்து நிற்க நேரிட்டது.

களத்திற்கு விஜயம் செய்த சாய்ந்தமருது பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.எல்.சம்சுதீன் தலைமையிலான சாய்ந்தமருது பொலிஸார் அங்கிருந்த கரையோரம் பேணல் திணைக்கள உத்தியோகத்தர் ஏ.எம். நுஸ்ரத் அலியிடமும், மீனவர்களிடமும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு இணக்கமான நிலையை உருவாக்கி, நிலையை சீர்செய்ததுடன் போக்குவரத்தையும் சீர் செய்தனர்.

இப் பிரச்சினை வாக்குறுதியளிக்கப்பட்டவாறு முடிவுக்கு கொண்டு வரப்படாமல் விட்டால் பெரியளவில் போராட்டம் நடத்த உள்ளதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

களத்திற்கு விஜயம் செய்த சாய்ந்தமருது முன்னாள் பிரதேச செயலாளர் ஏ.எல்.எம். சலீம் மீனவர்களின் பிரச்சினைகளை தீர்க்க பல்வேறு விடயங்களை முன்னெடுத்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் காட்டு

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Back to top button
error: