
நாட்டில் எவ்வித எரிபொருட்களுக்கும் தட்டுப்பாடு இல்லை என மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
அத்துடன் வரும் வியாழக்கிழமை (22) 9000 மெட்ரிக் தொன் பெற்றோல் சரக்கு கப்பல் நாட்டை வந்தடையவுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் எரிபொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக செய்திகள் வெளியாகியிருந்த நிலையிலேயே அமைச்சர் காஞ்சன விஜேசேகர டுவிட்டர் பதிவின் மூலம் இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அமைச்சர் மேலும் பதிவிடுள்ளதாவது,
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் கீழ் இயங்கும் எரிபொருள் நிரப்பும் நிலையங்களிலோ அல்லது லங்கா ஐ.ஓ.சி. எரிபொருள் நிரப்பு நிலையங்களிலோ ஒக்டேன் 95 ரக பெற்றோலுக்கு எவ்வித தட்டுப்பாடும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
நாடளாவிய ரீதியில் நாளாந்தம் 80 – 100 மெட்ரிக் தொன் ஒக்டேன் 95 ரக பெற்றோல் விநியோகிக்கப்படுகிறது. எரிபொருள் நிரப்பு நிலையங்களில் போதுமானளவு கையிருப்பு காணப்படுவதோடு , முற்பதிவு செய்யப்பட்ட அனைத்து இடங்களுக்கும் அவை தொடர்ச்சியாக விநியோகிக்கப்படுகின்றன.
இந்த நிலையில் நாளை மறுதினம் வியாழக்கிழமை (22) 9000 மெட்ரிக் தொன் ஒக்டேன் 95 ரக பெற்றோல் சரக்கு கப்பல் நாட்டை வந்தடையவுள்ளது என அமைச்சர் தனது டுவிட்டர் பதிவில் மேலும் குறிப்பிட்டுள்ளார்