100 நாட்கள் செயல்முனைவு மக்கள் குரல் மயிலம்பாவளி பிரதேசத்தில் இன்று நடைபெற்றது.!!
வடக்கு கிழக்கு மக்களுக்கு கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வு வேண்டும் எனும் 100 நாட்கள் செயல்முனைவின் 80ம் நாள் போராட்டம் மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்பற்று பிரதேசத்திலுள்ள மயிலம்பாவளி கிராமத்தில் 19.10.2022 இன்று இடம்பெற்றது.
இச் செயல்முனைவில் மயிலம்பாவளி கிராம பொது கட்டிடத்தில் மக்கள் ஒன்றிணைந்து எமக்கு நிரந்தரமான அரசியல் உரிமை வேண்டும். எங்கள் நிலம் எமக்கு வேண்டும், நடமாடுவது எங்கள் உரிமை, பேச்சு சுதந்திரம் எங்கள் உரிமை, ஒன்று கூடுவது எங்கள் உரிமை, எங்கள் நிலங்களை அபகரிக்காதே என்று பல கோரிக்கைகள் அடங்கிய பதாதைகளை ஏந்தி கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்.
இதன் போது கிராம மக்கள் தாம் எதிர்நோக்குகின்ற பிரச்சனைகளான மீனவர்களுக்கு கடற்கரையில் மீனவர் கட்டிடம் இல்லாமை, மீன்பிடியை ஜீவனோபாயம தொழிலாக கொண்ட மீனவர்களுக்கு மண்ணெண்ணெய் வழங்காமை, காணாமலாக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி வழங்காமை உள்ளிட்ட தமது பிரச்சனைகள் தொடர்பான தமது கோரிக்கைகளை அரச அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு சென்றடையும் வகையில் ஊடகங்களிடம் முன்வைத்தனர்.
அத்தோடு தமிழ் மக்கள் இடையே பாரிய பிரச்சனையாக உள்ள காணாமலாக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி வழங்கல் தொடர்பாகவும் கவனம் செலுத்துமாறு மக்கள் கோரிக்கை முன்வைத்தனர்.
நிகழ்வில் அதிகளவான பொதுமக்கள் கலந்துகொண்ட நிரந்தரமான ஓர் அரசியல் தீர்வை பெற்றுதருமாறு கோசங்கள் எழுப்பியவண்ணம் வீதியில் நடைபவனி ஒன்றையும் முன்னெடுத்தனர்.
நிகழ்வில் கலந்து கொண்ட வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் இணைப்பாளர் திரு. கண்டுமணி லவகுசராசா மக்களுக்கு நாட்டின் நடைமுறை சட்டங்கள் தொடர்பாக சில கருத்துக்களை முன் வைத்தர்.
இந்த கவனயீர்ப்பு நிகழ்வில் வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் இணைப்பாளர் திரு. கண்டுமணி லவகுசராசா, சிவில் அமையத்தின் உத்தியோகத்தர்கள், அகம் நிறுவனத்தின் உத்தியோகத்தர்கள், சூழலியல் நீதிக்கான மக்கள் கூடம் நிறுவனத்தின் உத்தியோகத்தர்கள்,சிவில் சமூகம் சார்ந்த செயற்பாட்டாளர்கள், பிரதேச மீனவ மற்றும் விவசாய சங்கத்தினர், பிரதேச அபிவிருத்திச் சங்கத்தினர் , காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.






















